Saturday, February 13, 2016

அழகார்ந்தநாயகி பஞ்சகம்

அழகார்ந்தநாயகி பஞ்சகம்

 அழகினுக் கழகைத் தந்த
     அழகியே, அம்மை யே!பூம்
பொழிலிடைப் பூந்துருத்திப்
      பொய்யிலி நாதர், கையில்
மழுவினை, மானை ஏந்தும்
       மன்னவன் பாகம் கொண்டோய்!
பழவினைக் காட்டைத் தீய்க்கும்
        பதமலர்    சரணம்   தாயே!    1

 தேவியே, மறைகள் நான்கும்
          தேடுமெய்ப் பொருளே! ஈசன்
ஆவியே, அமுதம் தோய்ந்த
        அழகியே, அரனார் பாகம்
மேவிய மேன்மையே நின்
        மென்மலர்ப் பாதம் பாக்கள்
தூவிநான் தொழுது போற்றத்
         துணைவர வேண்டும் தாயே!    2

 பிரமனங் கிருக்க ஒட்டான்
           பிறப்பெனும் சிட்சை செய்வான்!
இரக்கமில் எமனோ என்னை
          இவ்விடம் இருக்க ஒட்டான்!
உரமழிந் தோய்ந்தேன்,தேய்ந்தேன்
         உதையுறு பந்தாய் ஆனேன்!
அரனொரு பாகம் சேர்ந்த
           அழகியே, சரணம் தாயே!       3

 பொன்னிலே விருப்பம் இல்லை
            பொருளிலே நாட்டம் இல்லை
உன்னையன் றின்றி யாரும்
           உறவெனக் கில்லை அம்மே!
இன்னமு தழகீ! ஈசன்
           இடப்புறம் கவர்ந்த தாயே!
மின்னலாய் முதுகுத் தண்டின்
          மிசையெழு சுடரே!போற்றி!        4

 பூரண நிலவாய்ப் பூத்த
         பூவன நாதர் வாழ்வே!
நீறணி நிமலர் பாகம்
         நிறைவுசெய் அழகீ! அன்ன
பூரணீ! புதுமைக் கெல்லாம்
          புதுமையே! உலகுக் காதி
காரணீ! காளீ! காக்கும்
        கழலிணை சரணம் தாயே!         5

சு. ரவி

 

 


No comments:

Post a Comment