Friday, February 12, 2016

கவிதை என்ன பொழுதுபோக்கா? - K Ravi

கவிதை என்ன பொழுதுபோக்கா? இல்லை, அது ஒரு வெறி, கோலவெறி என்பான் பாரதி. அவளுக்கு ஆட்பட்டால்தான் தெரியும் சேதி.

வார்த்தைக ளாலொரு மஞ்சம் அமைக்கக் 
கட்டளை இடுகின்றாய் 
மனமும் மனமும் தழுவிக் கொள்ள 
மௌனம் போதாதா 
உவமை என்ற கண்ணா டிக்குள் 
தெரியுமா உன் உருவம் 
உண்மை என்ற தீபம் அன்றோ 
உந்தன் ஒளிவடிவம் 
சந்தம் என்ற அணிகலன்கள் 
சாற்ற மனமில்லை 
அனுபவத்தில் நனையும் போதோ 
ஆடைக ளும்தொல்லை 
பசிக்குநான் என்னைப் புசிக்கநீ என்ற 
மர்மம் அறியாமல் 
படிக்க லாமே எனநினைத்துப் 
பழகத் தொடங்கினேன்
இழக்க இழக்க இன்னும் என்னை 
இழக்க விரும்புகிறேன் 
இதற்கு மேலும் வார்த்தை யாட 
என்ன இருக்கிறது 
வார்த்தைக ளாலொரு மஞ்சம் அமைக்கக் 
கட்டளை இடுகின்றாய் 
மனமும் மனமும் தழுவிக் கொள்ள 
மௌனம் போதாதா 
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து ரசிப்போம் 
சேர்ந்து புசிப்போம் நாம் 
தீப வாசல் திறந்து வைத்தால் 
சேர்ந்து வசிப்போம் நாம் 
உன்னுள் என்னை உலகம் காண 
ஒளிகொடுப் பாய்கவிதா 
ஒவ்வோர் அணுவும் உனக்கா கத்தான் 
உணர்வு புரியாதா 
வார்த்தைக ளாலொரு மஞ்சம் அமைக்கக் 
கட்டளை இடுகின்றாய் 
மனமும் மனமும் தழுவிக் கொள்ள 
மௌனம் போதாதா 
29.01.2000

No comments:

Post a Comment