Tuesday, March 8, 2016

தாய் - Hari Krishnan

என் தாயாருடைய இறுதிச் சமயங்களில் ஒருநாள் எழுதியது.   ஒருவரியும் கற்பனை இல்லை.  செய்ததைச் சொல்லியிருக்கிறேன். மகளிர் தினத்தில் அவருக்காகவும் எல்லாத் தாய்களுக்காகவும்:


தொட்டுத் தோளில் மெதுவாக
தூக்கிச் சாய்த்து விரல்வழியே
கொட்டும் மனத்தைச் சமர்ப்பித்து
கோதித் தலையை முதுகினிலே
தட்டி அணைத்து ஒருவாயே
சாதம் ஊட்டி விழிவாசல்
முட்டும் கண்ணீர்க் கணைபோட்டு
மூன்று நிமிடம் முன்னால்தான்

நடுங்கும் கையும் தொண்டைக்குள்
நசுங்கிப் போகும் மழலையுமாய்
இடுங்கிப் போகும் கண்ணிலொளி
என்னைப் பார்த்துச் சிதறுவதாய்
மடியில் தலையைக் கிடத்தியதால்
மலர்ந்த மனமும் கொண்டவளை
'படும்மா' என்று கரகரத்தேன்.
பாதம் பற்றிக் கண்சேர்த்தேன்.

என்னைச் சுமந்த என்ஜனனி
இன்று தளர்ந்தாள் அசையாமல்.
முன்னம் சுமந்த தன்னுயிரை
மூடிக் கண்ணுள் வைத்தபடி
சின்னக் குழந்தை எனக்கான
தேவதை அங்கே தூங்குகிறாள்.
அன்னை அங்கே உறங்குகிறாள்
அம்மா இன்னும் எத்தனைநாள்.

No comments:

Post a Comment