Tuesday, March 8, 2016

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே - Ramanan

மனம் கொன்ற பாவம் தனைக் கண்ட கோலம்
மலர் மாலை யாகிப் பதம் சூடும் காலம்
விசித்ரம் வினோதம் விளங்காத போதம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அசைவற்ற கண்கள் அகண்ட ப்ரபஞ்சம்
அமைதித் தடாகம் அலைகள் சுநாதம்
சினத்தோடிருக்கும் தனித்தேன் தரங்கம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

துரும்பாகி நெஞ்சில் துளிர்க்கின்ற கண்ணீர்
அரும்பாத முன்வந் தணைக்கின்ற தெய்வம்
கரங்கள் விசாலம் வரங்கள் சுபாவம்
காருண்யமே ஈசன் காட்டும் ப்ரபாவம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அவன்தந்த வார்த்தை அவன்வைத்த போதை
அவன்செய்த மாயை அகந்தைப் பதாகை
சிவன்சொந்தம் என்கின்ற போதே வசந்தம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அலுக்காது நாமம் அடங்காது தாகம்
கணம்தோறும் நெஞ்சத்தில் காபாலி நடனம்
நடுங்கித் துகள்போல் நொறுங்கட்டும் காலம்
பயங்கள் விதிப்பேய்கள் யாவும் நிர்மூலம்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

புயல்வீசும் பாதம் நிழல்தேடும் வேதம்
புஜம்போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்
கணங்கள் யுகங்கள் மயங்கும் ஸ்வரங்கள்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிரம்தாழ்த்தி எங்கள் சிவன்வெற்றி சொல்ல
கரம்பற்றி மெல்லக் கரைசேர்க்கும் செல்வன்
கபாலன் தயாளன் கனல்மின்னும் சூலன்
அருள்தேடும் கைக்குள் அமர்கின்ற பாலன்
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

உயிர்நின்ற போதும் உணர்வாக மோதும்
அருள்வீசும் தீபம் அகண்ட ப்ரகாசம்
பதம்கண்ட நெஞ்சில் கணம்தோறும் தில்லை
சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

No comments:

Post a Comment